கோபி அருகே ரிக்லாரி கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்தார், மேலும் 5 பேர்கள் படுகாயம் அடைந்தனர்.
கோபி மற்றும் சுற்றுப் பகுதியில் கடும் வறட்சி நிலவி வருவதால் தடப்பள்ளி, அரக்கன்கோட்டை வாய்க்காலில் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக பாசனத்திற்குத் தண்ணீர் திறந்து விடப்படவில்லை. மேலும் தற்போது இந்த ஆண்டும் தண்ணீர் திறந்து விடப்படுமா என்பது விவசாயிகள் கவலைப்படுகின்றனர்.இதனால், விவசாயிகள் தங்களது வயல்களில் ரிக்லாரி மூலம் ஆங்காங்கே போர்வெல் அமைக்கும் பணிகளைச் செய்து வருகிறார்கள்.
நம்பியூரைச் சேர்ந்த மணி என்பவருக்குச் சொந்தமான ரிக்வண்டி கோபியை அடுத்த கள்ளிப்பட்டி அருகே போர்வெல் போட்டு முடித்து விட்டு அத்தாணிக்கு நேற்று(ஏப்.5) திரும்பி வந்து கொண்டிருந்தது.பெருமுகை அரக்கன்கோட்டை வாய்க்கால் ஓரத்திலிருந்து ரிக்லாரியை டிரைவர் ரங்கசாமி திருப்ப முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக லாரி நிலை தடுமாறி அருகில் இருந்த வாய்க்காலில் தலைகுப்புற கவிழ்ந்தது.
விபத்தில், ரிக்லாரியில் பயணம் செய்த 6 பேர்கள் படுகாயமடைந்தனர். ரிக்லாரி டிரைவர் ரங்கசாமி காயமின்றி உயிர் தப்பினார். காயமடைந்தவர்கள் விபரம் வருமாறு
குன்றி மலைப்பகுதியைச் சேர்ந்த பெருமாள்(21), ராஜூ(23), விளாங் கோம்பையைச் சேர்ந்த பெரியசாமி(15), மணி(28), மணியன்(27), மதன்(45) ஆகிய 6 பேர்கள் படுகாயமடைந்தனர். இவர்கள் அனைவரும் கோபி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டனர். பலத்த காயமடைந்த பெரியசாமி மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.ஆனால் செல்லும் வழியிலேயே இவர் உயிரிழந்தார்.
விபத்தின் காரணமாக ரிக்லாரி திடீரென தீபிடித்தது. உடனடியாக, இது குறித்து கோபி தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. நிலைய பொறுப்பு அதிகாரி ராஜன் தலைமையிலான தீ தடுப்பு மற்றும் மீட்புக் குழுவினர் விரைந்து சென்று தலைகுப்புற கவிழ்ந்து கிடந்த ரிக்லாரியில் ஏற்பட்ட தீயை அணைத்தனர்.விபத்து குறித்து பங்களாப்புதூர் இன்ஸ்பெக்டர் கதிரேசன் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










